Thursday, 13 July 2017

திருநீற்றுப் பதிகம் - பதிகப் பலன்

ஆற்றல் அடல்விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்
தேற்றித் தென்னன் உடலுற்ற தீப்பிணியாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே

ஆற்றலும், வலிமையும் உடைய விடையின் மீது ஏறிவரும் ஆலவாயானின் திருநீற்றைப் போற்றி, பூசுரனான ஞான சம்பந்தன் செய்த இப்பாடல், தென்னனின் (பாண்டியனின்) வெப்பு நோயினைத் தீர்த்து. இப்பதிகத்தை ஓதுவார்கள், நல்லவர்களாவார்கள்.

திருநீற்றுப் பதிகம் முற்றிற்று.

பதிகத்தை ஓதி, நன்மை அடைவோமாக.

பின் குறிப்பு: நம்மில் பலர் திருநீற்றை (விபூதி) இட்டுக்கொள்வதில்லை. இதன் உயர்வு நமக்கு தெரிவதில்லை. இன்று முதல், நாம் இட்டுக்கொள்வோம்.

நமச்சிவாய வாழ்க!

திருச்சிற்றம்பலம்.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 10

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமும் கூடக்
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளா ரேத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே

அண்டத்தில் உள்ளவர்கள் பணிந்து போற்றும் ஆலவாயானின் திருநீறானது:
1. குண்டிகை - கமண்டலம், சாக்கியர் - சமணர்.
கமண்டலம் ஏந்தும் பௌத்தர்கள், சமணர்கள் ஆகியவர்களுக்கு திகைப்பினைத் தருவது.
2. எண்ணுவதற்கு இனியது.
3. எட்டுத் திசைகளில் வாழும் உணர்வுடயோர்களால் (sensible persons), போற்றப்படுவது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 9

மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே

ஆலம் - விடம். விடத்தை உண்டு, அதனால் கறுத்த மிடறுடைய (மிடறு - கழுத்து), ஆலவாயனின் திருநீறு,
1. மாலும் (விஷ்ணுவும்), அயனும் (பிரம்மனும்) அறியாத வண்ணம் உடையது. சிவபெருமானின் அடியும் முடியும் காண பிரமனும், விஷ்ணுவும் மேலும் கீழும் தேடி அலைந்து தோல்வியுற்றனர் அல்லவா? அதனால் அவர்களால் அறிய முடியாத வண்ணம் கொண்டது என்கிறார்.
2. வானுலகில் உள்ள தேவர்கள், தங்கள் உடல் முழுதும் பூசிக்கொள்வது.
3. பிறவி என்னும் துயரைத் தீர்க்கவல்லது. பிறவி இல்லை எனில் இன்பமே. அதனால் பேரின்பத்தைத் தர வல்லது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 8

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவணம் ஆவது நீறு பாவம் அறுப்பது நீறு
தராவணம் ஆவது நீறு தத்துவம் ஆவது நீறு
அரா வணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே

அரா - பாம்பு. பாம்புகளை அணிந்த திருமேனி உடைய சிவபெருமான் அவன் திருநீறு,
1. இராவணன் அவன் உடலில் பூசிக்கொண்டு பயன் பெற்றது.
2. நல்ல சிந்தனை கொண்டவர்களால் நினைக்கத் தக்கது.
3. பராவணம் - பரா சக்தி. பராசக்தியின் வடிவமானது.
4. பாவங்களை அறுக்கக்கூடியது.
5. தராவணம் - உயர்ந்த தத்துவம். பிரம்ம ஞானம் ஆனது.
6. தத்துவம் - மெய்ப்பொருள் (பிரம்மம்) ஆனது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 7

எயிலது வட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கியம் ஆவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம் அதாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் திருஆல வாயான் திருநீறே

அயில் - கூறிய மும்முனைகளை உடைய சூலம்.
சூலத்தைக் கையில் ஏந்திய ஆலவாயானின் திருநீறு,
1. எயில் - மதில். மும்மதில்/மூவெயில் - திரிபுரம். திரிபுரத்தை எரித்தது. திரிபுரம் எரிந்து பின் சாம்பலாக ஆயிற்று.
2. இம்மை, மறுமை ஆகிய இருபிறவிக்கும் பாதுகாப்பு தரவல்லது.
3. அணிவோர்க்கு (அணிந்து பழகியோர்க்கு) பலனைத் தருவது
4. பாக்கியம் - செல்வம். திருநீறே செல்வமாகும். விபூதி என்றால் பெருமை.
5. துயில் - உறக்கம். சோர்வினைத் தவிர்ப்பது.

இதை நான் பலமுறை உணர்ந்துள்ளேன். பகலில் சில சமயங்களில் உறக்கம் வருவது போலோ, தலை வலிப்பது போலோ உணர்ந்தால், திருநீறை நெற்றியில் இட்டுக்கொள்வேன். ஒரு புத்துணர்வு கிடைக்கும். உடலில் உள்ள கெட்ட நீரை, திருநீறு உறிஞ்சிவிடும் என்று பலர் அறிவியல் ரீதியாக ஆராய்ந்துள்ளனர். அதனால் தலைவலி குணமடைகிறது. தோலில் ஏற்படும் அரிப்பு கூட சரியாகி விடும். சர்வ ரோக நிவாரணி.

6. சுத்தமானது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 6

அருத்தம் அதாவது நீறு அவலம் அறுப்பது நீறு
வருத்தம் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம் அதாவது நீறு புண்ணியர் பூசும் வெண்ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே

அழகிய மாளிகை சூழ்ந்த திருஆலவாய் (மதுரை) என்னும் தலத்து இறைவனின் திருநீறு ஆனது:
1. அருத்தம் - செல்வம். உயர்ந்த மதிப்புடையதாகும்.
2. அவலம் - துயரம்/கவலை தரும் பிறப்பு இறப்பு சுழற்சி. அந்த சுழற்சியைத் துண்டிக்கும்.
3. வருத்தம் (சோகம்/துன்பம்) தீர்ப்பது
4. வானம் - இன்பம் அல்லது அழகு அளிப்பது. வானம் - வனப்பு - அழகு.
5. இட்டுக்கொள்வோர் யாவருக்கும் பொருத்தமாக இருப்பது.
6. புண்ணியம் செய்தோர்களால் பூசப்படுவது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 5

பூச இனியது நீறு புண்ணியம் ஆவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம் அதாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே

சொக்கநாத பெருமானின் திருநீறு,
1. பூசிக்கொள்வதற்கு இனிமையானது
2. புண்ணியத்தை தரவல்லது
3. அதனைப்பற்றி பேசுவதற்கு இனிமையானது
4. பெரிய தவம் புரியும் முனிவர்களுக்கு எல்லாம், ஆசைகளை அறுப்பது
5. முடிவானது (பேரின்ப நிலையைத் தரவல்லது)
6. உலகத்தாலும், அதில் வாழ் மக்களாலும் புகழத் தக்கது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 4

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே

ஈசனின் திருநீறு எப்படிபட்டது?

1. காண்பதற்கு இனியது
2. அழகைத் தர வல்லது
3. அதனை அணிவோர்க்கு பெருமை தரக்கூடியது.
4. மாணம் - இறப்பு. இறப்பினைத் தடுப்பது. மாளுதல் - இறத்தல். மாள் + அம் = மாளம். ள என்பது ண என்று சந்தியில் (புணர்ச்சியில்) மாறும்.
5. அறிவைத் தரும். திருநீறு அணிவதால் நமக்கு தெளிவு பிறக்கும். சோர்வு தீர்வதை நான் அனுபவித்துள்ளேன். சோர்வில்லை எனில், எதுவும் எளிதாகும். அதனால் நாம் நிறைய விஷயங்களை அறியலாம்.
6. சேணம் - உயர் நிலை. உயர்ந்த நிலையினை நமக்கு தரும்.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 3

முத்தித் தருவது நீறு முனிவர் அணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தித் தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தித் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே

ஆலவாய் அண்ணலின் திருநீறு,

1. முக்தித் தரும் - மோக்ஷம்
2. முனிவர்கள் அணிவது
3. சத்தியமானது - அதுவே உண்மை
4. தகுந்தவர்களால் புகழப்படுவது
5. இறைவனிடத்தில் பக்தி உண்டாகச் செய்வது
6. வாழ்த்தத் தகுந்தது (ஒன்றைப் பற்றி புகழ வேண்டுமானால், அதற்கு தகுதி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தகுதி உடையது நீறு)
7. அட்டமாசித்திகளை (எட்டு சித்திகள் - அணிமா, மஹிமா, கரிமா, லஹிமா, ப்ராதி, ப்ரகாம்யம், வசித்வம், ஈசத்வம்) தர வல்லது.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 2

வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதம் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு உண்மையில் உள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே

சீதப் புனல் - குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர் நிறைந்த வயல்களை உடைய மதுரையில் அருள் புரியும் இறைவனது திருநீறு,

1. வேதங்களால் புகழப்படும் பெருமை வாய்ந்தது. திருநீற்றினை அணிந்த பின்னரே வேத மந்திரங்களை ஓதவும், கர்மங்கள் செய்யவும் வேண்டும்.
2. நம்மை வாட்டக்கூடிய துயரங்களைத் தீர்க்க்கூடியது.
3. மெய்ஞானத்தை (போதம் - சிவ ஞானம்) தரக்கூடியது.
4. (புன்மை) அறியாமையை அழிக்கக் கூடியது.
5. யாவராலும் போற்றத்தக்கது.
6. உண்மையாய் என்றும் நிலைத்து இருப்பது. இந்த உடலை விட்டு உயிர் பிரிந்த பின்னர் மிஞ்சி இருப்பது சாம்பல் ஒன்று மட்டுமே.

திருநீற்றுப் பதிகம் - பாடல் - 1

திருஞானசம்பந்தர் - இரண்டாம் திருமுறை.

பாண்டிய மன்னன், சைவ சமயத்தை துறந்து, பிற சமயத்தை சார்ந்திருந்தான். அவனது மனைவி, சைவத்தின் மீதும், சிவனின் மீதும் எல்லையற்ற பக்தி வைத்திருந்தாள். சம்பந்தரை மதுரைக்கு அழைத்தாள். சம்பந்தரின் வருகையை விரும்பாத மன்னன், அவர் வந்து தங்கிய மாளிகைக்கு தீ வைக்குமாறு தன் பணியாட்களை ஏவினான். இதனை அறிந்த சம்பந்தர், இந்த தீ, பாண்டியனைத் தாக்கட்டும் என்று கூறினார். அடுத்த நொடியில், பாண்டியன் வெப்பு நோயினால் வருத்தமுற்றான்.

பிற சமயத்தோர் என்ன செய்தாலும் அவர்களால் அந்த நோயினை விரட்ட முடியவில்லை. சம்பந்தர், ஆலவாய் அண்ணல் (மதுரை சொக்கநாதர்) அவரின் திருநீற்றினை எடுத்து, மன்னன் மீது பூச, நோய் நொடியில் நொடித்துப் போனது.

அப்போது பாடிய பதிகமே இந்த திருநீற்றுப் பதிகமாகும். இந்த பதிகத்தை ஓதி வந்தால், தீரா நோய்கள் தீரும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரம் ஆவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான்திரு நீறே

செந்துவர் வாய் உமை பங்கன் - சிவந்த பவழம் போன்ற வாயுடைய உமைபங்கன் (மாதொரு பாகன்) - சொக்கநாதன் அவனின் திருநீறு -

1. மந்திரம் போன்றது - மந்திரம் என்பது அதனை நினைத்தால், நினைத்தவரைக் காப்பது.
2. வானவர்கள் (தேவர்கள்) யாவரும் பூசிக்கொள்வது.
3. அழகானது.
4. சிறந்த நூல்களால் போற்றப்படுவது.
5. ஆகமங்கள் யாவும் புகழ்வது
6. சிவனிடத்தில் இருப்பது

Thursday, 25 February 2016

திருநல்லம் பதிகம்

ராகம்: ராகமாலிகை
தாளம்: ஆதி (திஸ்ரநடை)

பாடல் - 01
ராகம் - செஞ்சுருட்டி

கல்லால் நிழல் மேய கறைசேர் கண்டா என்று
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே

பாடல் - 02
ராகம்: ஹம்ஸத்வனி

தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பல செய்து, சுடர்பொன் சடை தாழ
கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்
நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே

பாடல் - 03
ராகம்: புன்னாகவராளி

அந்தி மதியோடும் அரவச் சடை தாழ
முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டெரியாடி,
சிந்தித்தெழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 04
ராகம்: நாதநாமக்ரியா

குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ
மிளிரும் அரவொடு, வெண்ணூல் திகழ் மார்பில்
தளிரும் திகழ் மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே

பாடல் - 05
ராகம் - பிருந்தாவன சாரங்கா

மணியார் திகழ் கண்டம் முடையான், மலர் மல்கு
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணித்
துணிவார் மலர் கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 06
ராகம்: காபி

வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான், விரி கொன்றை
ஈசன் என உள்கி எழுவார், வினைகட்கு
நாசன், நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 07
ராகம்: பெஹாக்

அங்கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்காடு இடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 08
ராகம் - மாண்ட்

பெண்ணார் திருமேனிப் பெருமான், பிறை மல்கு
கண்ணார் நுதலினான், கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை, இறையே விரலூன்றி
நண்ணார் புரம் எய்தான், நல்லம் நகரானே

பாடல் - 09
ராகம் - தேஷ்

நாகத் தணையானும், நளிர்மா மலரானும்,
போகத் தியல்பினால் பொலிய, அழகாகும்
ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே

பாடல் - 10
ராகம்: திலங்

குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே
பொறிகொள் அரவார் தான் பொல்லா வினை தீர்க்கும்
நறைகொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே

பதிக பலன்
ராகம்: சிந்து பைரவி

நலமார் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை அமர்ந்தோங்கு
தலமாம் தமிழ் ஞான சம்பந்தன் சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 10 February 2016

திருநல்லம் - பதிகத்தின் பலன்

ராகம்: சிந்து பைரவி
தாளம்: ஆதி திஸ்ரநடை

நலமார் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை அமர்ந்தோங்கு
தலமாம் தமிழ் ஞான சம்பந்தன் சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே

பொருள்:

நலம் தரும் மறையினை ஓதும் வேதியர்கள் வாழும் நல்லத்தில் அருள்பவரும், அழிக்கும் தொழில் புரிய கையில் மழுவை (நெருப்பை) எந்தியவருமான சிவபெருமானை, கொச்சைவயம் (சீர்காழியின் மற்றொரு பெயர்) என்னும் ஸ்தலத்தில் வாழும் ஞானசம்பந்தனால் சொல்லப்பட்ட இந்த பதிகத்தினை சொல்லக்கூடியவர்களின் கவலைகள் அனைத்தும் நீங்கும் என்பது உறுதி.

இப்பதிகத்தை கலை என்று சம்பந்தர் கூறுகிறார். இதிலிருந்து இந்த பதிகத்தின் உயர்வை காண்க.

கொச்சைவயம் என்ற பெயர் ஏற்பட்ட காரணம்:
பராசர முனிவர் மச்சகந்தியை கூடிய பழிச்சொல் (கொச்சை) நீங்க வழிபட்ட ஸ்தலம் ஆதலால் கொச்சைவயம் என்ற பெயர் பெற்றது.

சம்பந்தரிங் முந்தைய பதிகங்களில் சீர்காழிக்கு அவர் கூறிய பிற பெயர்களை நினைவு கொள்வோம்.

திருநெடுங்களம் பதிகத்தில் - சிரபுரம்
திருபிரமபுரம் பதிகத்தில் - பிரமாபுரம்

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Monday, 8 February 2016

திருநல்லம் - 10

ராகம்: திலங்
தாளம்: ஆதி, திஸ்ரநடை

குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே
பொறிகொள் அரவார் தான் பொல்லா வினை தீர்க்கும்
நறைகொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே

பொருள்:

குறியில் - குறிக்கோள் இல்லாத
குறிக்கோள் இல்லாத சமணர், பௌத்தர் ஆகியோரின், அறிவற்ற உரைகளை (அறிவில் உரை) கேட்டு, ஒரு மணித்துளியும் வீணாக்காதே.

ஒளி மிகுந்த பாம்பினை, தன் இடையில் கட்டிக்கொண்ட அரவார் ஒருவரே, நம்  பொல்லா வினைகளையெல்லாம் தீர்க்க வல்லவர். அவர் அருளும் ஸ்தலமும், தேன் போன்ற இனிமை சூழ்ந்த ஸ்தலமுமான நல்லத்தை நாடுங்கள். நன்மை பெறுங்கள் என்று சம்பந்தர் பாடுகிறார்.

சம்பந்தரின் பதிகங்கள் முன்பு பார்தவையில், 10 ஆம் பாடல், சமண, பௌத்தர்களை கடியும் படி உள்ளது.

திருநெடுங்களம் பாடல் 10
திருபிரமபுரம் பாடல் 10

இரண்டையும் இதனோடு ஒப்பிட்டு பார்க்கவும்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Saturday, 6 February 2016

திருநல்லம் - 09

ராகம் - தேஷ்
தாளம் - ஆதி திஸ்ரநடை

நாகத் தணையானும், நளிர்மா மலரானும்,
போகத் தியல்பினால் பொலிய, அழகாகும்
ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே

பொருள்:

நாகத்து அணையான் - நாகத்தினை தலையணையாக கொண்ட விஷ்ணு
நளிர் மா மலரான் - அழகிய தாமரைப் போன்ற முகங்கள் கொண்ட ப்ரம்மா

விஷ்ணுவும், பிரம்மாவும் போகத்தால் அலைமகளோடும், கலைமகளோடும் மகிழ்ந்து இருக்கின்றனர்.

பாம்பினை, தன் இடையில் (நாகம் அரையார்) அணிந்த சிவபெருமானும், அழகே வடிவான மலைமகளோடு அமர்ந்து,  அருள் புரியும் இடம், நல்லம் நகராகும்.

இன்று ப்ரதோஷம். சனி ப்ரதோஷம் மிகவும் விசேஷம். இன்று, பெருமான், அம்மையோடு கூடிய வைபவத்தை த்யானம் செய்தல் மிக உயர்ந்த பலனை அளிக்கும்.

சம்பந்தர் பதிகங்கள் இதுவரை கண்ட மூன்றில், 9-வது பாடலில், சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் பற்றிய குறிப்பு காணப்படும்.

திருநெடுங்களம் பாடல் - 9, திருப்பிரமபுரம் பாடல் - 9 காண்க.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Thursday, 4 February 2016

திருநல்லம் - 08

ராகம் - மாண்ட்
தாளம் - ஆதி திஸ்ரநடை

பெண்ணார் திருமேனிப் பெருமான், பிறை மல்கு
கண்ணார் நுதலினான், கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை, இறையே விரலூன்றி
நண்ணார் புரம் எய்தான், நல்லம் நகரானே

பொருள்:

பெண்ணார் திருமேனிப் பெருமான் - தேவியை தன் திருமேனியில் இடப்புறத்தில் கொண்ட பெருமான்

பிறை மல்கு கண்ணார் நுதலினான் - பிறை சூடியவர். நுதல் - நெற்றி. நெற்றியில் ஒரு கண் உடையவர்.

கயிலை கருத்தினால் எண்ணாது எடுத்தானை - இலங்கை அரசன் இராவணன் மாபெரும் சிவ பக்தன். கயிலாய மலையினை பெயர்த்து எடுத்து, இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று ஆசையினை மட்டுமே கொண்டான். சிவபெருமானின் பலத்தை நினைத்துப் பார்க்கவில்லை. பெருமானின் மகிமையினை எண்ணாது கயிலை மலையை பெயர்த்து எடுத்தவனை,

இறையே விரலூன்றி நண்ணார் புரம் எய்தான் - சிவபெருமான், தன் கால் கட்டை விரல் ஒன்றை மட்டுமே பூமியில் ஊன்றி, இராவணனை கயிலை பகுதியை விட்டு வெளியே எறிந்தார். எய்திய அம்பு போல, இராவணன் கீழே விழுந்தான். மேலும் அரக்கர்களின் புரமான திரிபுரத்தை, ஒற்றை அம்பினை எய்தி அழித்தார்.

அவரே, நல்லம் நகர் மேவுபவர்.

சம்பந்தர் பதிகங்களில் இராவணன், சிவபெருமானிடம் தோற்ற சம்பவம் அடிக்கடி இடம்பெறும். திருநெடுங்களம் பதிகம் பாடல் 8 (குன்றின் உச்சி மேல்), திருப்பிரமபுரம் பதிகம் பாடல் 8 (வியரிலங்குவரை) ஆகியவற்றிலும் காணலாம்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 3 February 2016

திருநல்லம் - 07

ராகம்: பெஹாக்
தாளம்: ஆதி திஸ்ரநடை

அங்கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்காடு இடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே

பொருள்:

அங்கோல் - அம்+கோல் = அழகிய கொடி.
வளை மங்கை - வளையல்கள் அணிந்த பெண்

அழகிய கொடிபோல் வரிசையாக வளையல்கள் அணிந்த உமா தேவி காண, தாருகா வன முனிவர்கள் எய்திய நெருப்பினை தன் கையில் ஏந்தியவர் நம் சிவபெருமான்.

நல்ல கொன்றை மலர்களை சூடிய கூந்தல் உடையவர்.

வெங்காடு = இடுகாடு. அதுவே சிவனின் இடம். அந்த இடத்தில், தீயினை கையில் ஏந்தி, தாண்டவம் ஆடி, சம்ஹாரம் (அடக்கம்) என்னும் தொழிலினை புரிகிறார்.

இத்தகு பெயர் பெற்ற நல்ல அரசன் (நங்கோன்), நல்லம் நகர் மேவுபவர் நம்மை ஆள்வார்.

குறிப்பு:
அம்பாளுக்கு அபர்ணா என்று பெயர். அ + பர்ணா - பர்ணம் - இலை. இலைகள் இல்லாத கொடி போன்றவள் அம்பாள். அதனால் அபர்ணா என்று பெயர். சிவபெருமான் கட்டை மரம் போல், அசைவற்றவர். அவரை கொடிபோல் சுற்றியவள் அம்பாள். இவர்களின் கீழ், கிளைகள் இல்லாத கன்று ஒன்று. அவரே விசாகன் என்ற முருகப்பெருமான். வி + சாகன் = சாகை - கிளை. விசாகை = கிளைகள் அற்றது. சோமாஸ்கந்த மூர்த்தியின் தத்துவம் இதுவே. சிவன் (சோமன்), பார்வதி இருவருக்கும் இடையே முருகனின் (ஸ்கந்தன்) திருவுருவம் இருக்கும். சோம + ஸ்கந்த = சோமாஸ்கந்தன்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Tuesday, 2 February 2016

திருநல்லம் - 06

ராகம்: காபி
தாளம்: ஆதி, திஸ்ரநடை

வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான், விரி கொன்றை
ஈசன் என உள்கி எழுவார், வினைகட்கு
நாசன், நமையாள்வான் நல்லம் நகரானே

பொருள்:
வாசனை நிறைந்த மலர்களை சூடிக்கொண்டிருக்கும், மலையரசனின் மகளோடு ஒன்றாக வீற்றிருப்பவர் சிவபெருமான். மலையரசனின் புதல்வி என்பதால், அன்னைக்கு மலைமகள், ஷைலஜா, ஹைமவதி, கிரிஜா என்ற பெயர்கள் வந்தன.

சிவபெருமான் தன் மேனியில் பூசிக்கொண்டுள்ளது திருநீறு. சுடு நீறு என்று சம்பந்தர் இங்கு கூறியுள்ளார். இடுகாட்டில், தேகங்களை தகனம் செய்தபின் வருவது சாம்பல். அந்த சாம்பலை பெருமான் பூசியுள்ளார். அதனால் சுடுநீறு என்று சம்பந்தர் கூறியுள்ளார்.

திருவெண்காடு என்று ஒரு ஸ்தலம். நவக்ரஹ ஸ்தலங்களுள் புதனுக்கு உரிய ஸ்தலம். ஸ்வேதாரண்யம் என்று சமஸ்க்ருதத்தில் அதற்கு பெயர். சுடுகாட்டில் காணப்படுவது வெள்ளை நிற விபூதி. வெம்மையான காடு அல்லது வெள்ளை நிறக்காடு ஆனதால், வெண்காடு என்று பெயர் பெற்றது.

விரி கொன்றை ஈசன் - விரிந்த சட முடி கொண்ட, கொன்றைப்பூக்கள் சூடிய சிரத்தை உடைய ஈசன்.

ஈசனின் பெயரை உள்ளம் உருக பாடினால், நம் வினைகளை நாசம் செய்வார். உருகி என்பது, வழக்கில் உள்கி என்றானது.

அப்படிப்பட்ட, வினைகளின் நாசன், நம்மை ஆள்வார். அவரே நல்லம் நகர் மேவுபவர்.

பாடல் கேட்க:

Check this out on Chirbit

Monday, 1 February 2016

திருநல்லம் - 05

ராகம் - பிருந்தாவன சாரங்கா
தாளம் - ஆதி திஸ்ரநடை

மணியார் திகழ் கண்டம் முடையான், மலர் மல்கு
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணித்
துணிவார் மலர் கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே

பொருள்:
மணியார் திகழ் கண்டம் - சிவபெருமான், பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்டு, அதனை தன் கழுத்துப்பகுதியில் நிறுத்தியதால், மணி போல் அந்த பகுதி, பருத்துக் காணப்படும்.

மலர் மல்கு பிணி வார் சடை எந்தை - மலர்கள் பிணைந்து காணப்படும் சடையினை உடைய என் தந்தை

மணி போன்ற கழுத்துப்பகுதியை உடையவரும், மலர்கள் தரித்த சடையினை உடையவரும், நம் தந்தையானவருமான நம் பெருமானின் கழல்களை, மலர்கள் கொண்டு தொழுது போற்றும் அடியார்களால் சூழப்பட்டவருமான நல்லம் நகரான், ஸ்ரீ உமாமஹேச்வரர் நம்மை காக்கட்டும்.

 பாடல் கேட்க:

Check this out on Chirbit

Wednesday, 27 January 2016

திருநல்லம் - 04

ராகம்: நாதநாமக்ரியா
தாளம்: ஆதி, திஸ்ரநடை

குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ
மிளிரும் அரவொடு, வெண்ணூல் திகழ் மார்பில்
தளிரும் திகழ் மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே

பொருள்:

குளிர்ந்த சந்திரனை சூடியவர். கொன்றைப் பூக்கள் அலங்கரிக்கும் தாழ் சடை உடையவர்.

பளீர் என்று மிளிரும் முனிவர்கள் அணியக்கூடிய மரவுரி (மர வோடு - புலித்தோல்) அணிந்தவர். வெண்மையான முப்புரி நூலினையும் (பூணூல்) தன் மார்பில் தரித்துள்ளார்.

இடது பாகத்தில், தையல் (அழகிய சிறிய வடிவம் கொண்ட பெண்) - பார்வதியை தாங்கியவர்.

நன்றாக விளையும் வயல்களால் சூழப்பட்ட நல்லத்தின் நாயகன், நம் சிவபெருமான். இதிலிருந்து, திருநல்லத்தில், சம்பந்தரின் காலத்தில் இருந்த செழிப்பினை தெரிந்துக்கொள்ளலாம்.

சிவபெருமானின் சடை, தாழ் சடை என்று மற்றொரு பக்தரான பேயாழ்வார்  (சென்னை திருமயிலையில் அவதரித்தவர். ஸ்ரீ மந் நாராயணனின் நந்தகி என்னும் கத்தியின் அம்சம்) பாடிய பிரபந்த பாடல் பறைசாற்றுகிறது. திருமலையில் உள்ள மூர்த்தத்தில், இரண்டு உருவும் ஒன்றாக தெரிகிறது என்று பாடுகிறார். ஹரி-ஹரன் பேதம் இல்லை என்பதற்கு இது ஒரு சான்று.

தாழ் சடையும் நீள் முடியும் ஒண் மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றும் - ஆல்
சூழும் திரண்டு அருவிப் பாயும் திருமலை மேல்
எந்தைக்கு இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து

தாழ் சடை - சிவன்
நீள் முடி - விஷ்ணு
ஒண் மழு - ஒளி பொருந்திய அக்னி - சிவன் தாங்கியுள்ளார்
சக்கரமும் - சுதர்ஷன சக்ரம் - விஷ்ணுவின் கையில் உள்ளது
சூழ் அரவு - பாம்பு - சிவனின் கழுத்தில் சூழ்ந்திருக்கும்
பொன் நாண் - பொன்னால் செய்த கயிறு - விஷ்ணு அணிந்திருப்பது

கடலால் சூழப்பட்ட இவ்வுலகில், திரண்டு அருவி பாயும் திருமலையில் வசிக்கும் எந்தையின்  (என் தந்தை - வெங்கடாசலபதி) உருவத்தில், இரு உருவமும் ஒன்றாய் இசைந்துள்ளது. சங்கர நாராயணன் என்று போற்றுகிறோமே, அதைத்தான் ஆழ்வாரும் பாடுகிறார்.

சங்கர நாராயண கோலத்தில், வலது பாகம் சிவன், இடது பாகம் விஷ்ணு. அர்த்தநாரீச்வர கோலத்தில், வலது பாகம் சிவன், இடது பாகம் பார்வதி.

இதிலிருந்து என்ன தெரிகிறது? நாராயணன், நாராயணீ, சிவன் எல்லாம் ஒரே பிரம்மத்தின் மாய தோற்றங்கள். ஸ்ரீ காஞ்சி மகா பெரியவாள், இந்த தத்துவத்தை கூறியுள்ளார். ஸ்ரீ ரா.கணபதி அவர்கள் தெய்வத்தின் குரல் நூலில் தெளிவு படுத்தியுள்ளார்.


பாடல் கேட்க:

Check this out on Chirbit