Thursday 25 February 2016

திருநல்லம் பதிகம்

ராகம்: ராகமாலிகை
தாளம்: ஆதி (திஸ்ரநடை)

பாடல் - 01
ராகம் - செஞ்சுருட்டி

கல்லால் நிழல் மேய கறைசேர் கண்டா என்று
எல்லா மொழியாலும் இமையோர் தொழுது ஏத்த
வில்லால் அரண் மூன்றும் வெந்து விழவெய்த
நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே

பாடல் - 02
ராகம்: ஹம்ஸத்வனி

தக்கன் பெருவேள்வி தன்னில் அமரரைத்
துக்கம் பல செய்து, சுடர்பொன் சடை தாழ
கொக்கின் இறகோடு குளிர் வெண்பிறை சூடும்
நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே

பாடல் - 03
ராகம்: புன்னாகவராளி

அந்தி மதியோடும் அரவச் சடை தாழ
முந்தி அனல் ஏந்தி, முதுகாட்டெரியாடி,
சிந்தித்தெழ வல்லார் தீரா வினை தீர்க்கும்
நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 04
ராகம்: நாதநாமக்ரியா

குளிரும் மதி சூடிக் கொன்றைச் சடை தாழ
மிளிரும் அரவொடு, வெண்ணூல் திகழ் மார்பில்
தளிரும் திகழ் மேனித் தையல் பாகமாய்
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே

பாடல் - 05
ராகம் - பிருந்தாவன சாரங்கா

மணியார் திகழ் கண்டம் முடையான், மலர் மல்கு
பிணி வார் சடை எந்தை பெருமான் கழல் பேணித்
துணிவார் மலர் கொண்டு தொண்டர் தொழுதேத்த
நணியான் நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 06
ராகம்: காபி

வாசம் மலர் மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான், விரி கொன்றை
ஈசன் என உள்கி எழுவார், வினைகட்கு
நாசன், நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 07
ராகம்: பெஹாக்

அங்கோல் வளை மங்கை காண அனல் ஏந்தி
கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக
வெங்காடு இடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்லம் நகரானே

பாடல் - 08
ராகம் - மாண்ட்

பெண்ணார் திருமேனிப் பெருமான், பிறை மல்கு
கண்ணார் நுதலினான், கயிலை கருத்தினால்
எண்ணாது எடுத்தானை, இறையே விரலூன்றி
நண்ணார் புரம் எய்தான், நல்லம் நகரானே

பாடல் - 09
ராகம் - தேஷ்

நாகத் தணையானும், நளிர்மா மலரானும்,
போகத் தியல்பினால் பொலிய, அழகாகும்
ஆகத் தவளோடும் அமர்ந்தங் கழகாரும்
நாகம் மரையார்த்தான் நல்லம் நகரானே

பாடல் - 10
ராகம்: திலங்

குறியில் சமணோடு குண்டர் வண்தேரர்
அறிவில் உரை கேட்டு அங்கு அவமே கழியாதே
பொறிகொள் அரவார் தான் பொல்லா வினை தீர்க்கும்
நறைகொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே

பதிக பலன்
ராகம்: சிந்து பைரவி

நலமார் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய
கொலைசேர் மழுவானைக் கொச்சை அமர்ந்தோங்கு
தலமாம் தமிழ் ஞான சம்பந்தன் சொன்ன
கலைகள் இவை வல்லார் கவலை கழிவாரே

பாடல் கேட்க:

Check this out on Chirbit

2 comments:

  1. இன்று மஹா சிவராத்திரி.ராகமாலிகையில் தேவார திருப்பதிகங்கள் மனதை இறை அனுபூதியில் நிறைத்தன.பண் இசைப்பதிகங்கள் மிக அருமை.

    ReplyDelete
  2. Hara hara Shankara SivaSiva Shankara

    ReplyDelete