Thursday 24 December 2015

திருப்பிரமபுரம் - சீர்காழி - 2

பாடல் - 2 
ராகம்: கௌளை
தாளம்: ஆதி, திஸ்ர நடை

முற்றல் ஆமை இள நாகமோடு என முளைக்கொம்பு அவை பூண்டு
வற்றல் ஓடுகலனாப் பலி தேர்ந்து எனது உள்ளம் கவர் கள்வன்
கற்றல் கேட்டல் உடையார் பெரியார் கழல் கையால் தொழுது ஏத்தப்
பெற்றம் ஊர்ந்த பிரமாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே

பொருள்:
முற்றல் ஆமை - வயது முதிர்ந்த ஆமை. விஷ்ணு, கூர்மாவதாரத்தில் ஆமை வடிவு கொண்டாரல்லவா? அந்த ஆமையின் ஓடினை, தன் மார்பில் அணிந்தார் சிவபெருமான்.

இள நாகம் - இளமையான பாம்பு. பாம்பினை பரமசிவன் தன கழுத்தில் அணிந்துள்ளார் என்பது யாவரும் அறிந்ததே.

முளைக்கொம்பு - காட்டுப்பன்றியின் ஒற்றைக்கொம்பு. திருமால், சிவனின் பாதத்தினை காண வராகமாக பூமிக்கு அடியில் தோண்டிக்கொண்டு சென்றார். பின்னர் காண முடியாமல் திரும்பினார். அதனால், பன்றியின் கொம்பினை உடைத்து, தான் அணிந்து கொண்டார்.

முதிர்ந்த ஆமையின் ஓடு, இளைய நாகம், பன்றியின் கொம்பு ஆகியவற்றை சிவ பெருமான் அணிந்துள்ளார்.

வற்றிய ப்ரம்ம கபாலத்தை தன் கையில் ஏந்தி பிக்ஷை எடுக்கும் பெருமான், நம் உள்ளம் கவர் கள்வன்.

காந்த சக்தியால் ஊசி போலவே
பிக்ஷாடனர் கோலமான கபாலியின்
சௌந்தர்ய வெள்ளம் தன்னில்
என் உள்ளம் மயங்கி விழுந்து அமிழ்ந்ததே

என்று பாபநாசம் சிவன், இறைவனின் இரவலர் கோலம் (பிக்ஷாண்டார்) பற்றி தான் எழுதிய சௌந்தர்ய வெள்ளம் தன்னில் என்ற மோகன ராக பாடலில் பாடியுள்ளார். அதாவது, காந்தம் எப்படி ஊசியினை தன்னிடம் இழுக்குமோ, அதுபோல் கபாலியின் பிக்ஷாண்டார் கோலம், தன்னை கவர்ந்து இழுக்கின்றது என்று பொருள்.

கற்றல், கேட்டல் உடையார் பெரியார் - இறைவனின் புகழினை கற்பவர்கள், இறைவனின் பெருமையினை கேட்பவர்கள் ஆகியோரை பெரியோர்கள் என்று சம்பந்தர் கூறுகிறார். அப்பெரியோர்கள், தங்கள் கைகளால், இறைவனின் திருப்பாதங்களை பற்றி, வணங்கி, அவர் புகழை பாடுகின்றனர்.

பெற்றம் ஊர்ந்த - வெள்ளை ரிஷபத்தின் மீது, இந்த பிரமாபுரத்தை வலம் வரும் பெருமான் இவரே.

பாடல் கேட்க:


Check this out on Chirbit

1 comment: